செல்போன் பறிப்பை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர் குத்திக்கொலை

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நடு அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (29). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது  நண்பர்களுடன் புராஜக்ட் ஒர்க் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அரசூர் கோவில்பாளையம் சாலையில் நடந்து சென்றபோது வீட்டுக்கு சில அடி தூரம் உள்ள நிலையில் பின்னால் பைக்கில் வந்த 2 பேர், தமிழ்ச்செல்வனை  வழிமறித்தனர். பின்னர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறிக்க முயன்றனர்.

செல்போனை தரமறுத்த தமிழ்ச்செல்வன், கூச்சலிட்டவாறு அவர்களுடன் சண்டை போட்டார். செல்போனை பறிக்க முடியாததால்  ஆத்திரமடைந்த மர்மநபர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை சரமாரியாக குத்திவிட்டு பைக்கில் தப்பினர். இதில், சம்பவ இடத்திலேயே தமிழ்ச்செல்வன் இறந்தார்.  பைக்கில் தப்பிய மர்மநபர்கள் அன்னூர் சாலையில் மகாலிங்கம் (25) என்ற வாலிபரை கத்தியால் குத்திவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர்.  மகாலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலையாளிகளை  போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: