புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்த போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தன்னைத் தொடர்பு கொண்டு பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா? என்று கேட்டதாக திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது செயல்பாட்டில் இருந்த திட்டக் கமிஷனில் துணைத் தலைவராக இருந்தவர் மான்டெக் சிங் அலுவாலியா. இவர் `பின்புலம்: இந்தியாவின் உயர் வளர்ச்சி ஆண்டுகளின் பின்னணியில் உள்ள கதை’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்ற எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நீர்த்துப் போக செய்யும் வகையில், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டம் முற்றிலும் முட்டாள்தனமானது, கிழித்து தூக்கி வீசப்பட வேண்டியது என்று ராகுல் காந்தி கடுமையாக விமரிசித்தார்.