பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டு பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 14ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அவர் உரையை வாசித்து முடித்ததும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரை 4 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பேரவை கூடும்.

முதலாவதாக கூட்டம் தொடங்கியதும், சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் தொடங்கும். நிதிநிலை அறிக்கையில்,  பள்ளி கல்வித்துறைக்கு ரூ31,181 கோடி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ6,754 போடி நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ18,540 கோடி நிதி என பல்வேறு விஷயங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் கவர்ச்சிகரமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை அதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு கடன் தொகை அதிகரிப்பு என்று கூறப்படுகிறது.

இன்றைய கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் அது குறித்து  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக  தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும், டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல விவகாரங்கள் தொடர்பாக திமுக உள்பட எதிர்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது.

Related Stories: