இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் தமிழகம் தினந்தோறும் போராட்ட களத்தை சந்திக்க நேரிடும்: மதிமுக தீர்மானம்

சென்னை: இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாசிச கொள்கைகள் தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் தினந்தோறும் போராட்ட களத்தை சந்திக்க நேரிடும் என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதையடுத்து லேசான தடியடி நடத்தப்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர் மட்ட குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைப்பெற்றது. கட்சியின் பொதுசெயலாளர் வைகோ, அவை தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா, உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், குடியிரிமை திருத்த சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்,   நகர்புற உள்ளாட்சி மற்றும் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதியையை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் மற்றும்  பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: