ராஜ்கோட்: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 346 ரன் எடுத்துள்ளது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தமிழகம் முதல் இன்னிங்சில் 424 ரன் குவித்து ஆல் அவுட்டானது. முகுந்த் 86, ஜெகதீசன் 183, சாய் கிஷோர் 27, முகமது 42 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட் 6 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்திருந்தது. அவி பரோட் 38, அர்பித் வாசவதா 11 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தது. பரோட் 82 ரன் (206 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேறினார்.