ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை எலைட் பிரிவு லீக் ஆட்டத்தில், சவுராஷ்டிராவுக்கு எதிராக தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 250 ரன் குவித்துள்ளது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தமிழகம், தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. சூரிய பிரகாஷ் 10, கவுசிக் காந்தி 17, ஸ்ரீதர் ராஜூ 13 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் அரை சதம் அடித்தார். அவர் 86 ரன் (112 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். அபராஜித் 20, ஜெகநாத் சீனிவாஸ் 1, சாய் கிஷோர் 27 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
ஜெகதீசன் - சாய்கிஷோர் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 250 ரன் குவித்துள்ளது (90 ஓவர்). ஜெகதீசன் 61 ரன், எம்.முகமது 1 ரன்னுடன் களத்தில் இருக்கின்றனர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட் 3, சிராக் ஜானி 2, தர்மேந்திர சிங் ஜடேஜா, பிரேரக் மன்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
சர்பராஸ் கான் அபாரம்வாங்கடே ஸ்டேடியத்தில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக நேற்று களமிறங்கிய மும்பை அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்துள்ளது (85 ஓவர்). ஆகர்ஷித் கோமல் 122 ரன் (240 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), சூரியகுமார் யாதவ் 43 ரன் விளாசினர். சர்பராஸ் கான் 169 ரன் (204 பந்து, 22 பவுண்டரி, 3 சிக்சர்), அங்குஷ் ஜெய்ஸ்வால் (0) களத்தில் உள்ளனர்.