நன்றி குங்குமம்
துபாயிலிருந்து அல்-அய்ன் நகரம் செல்லும் வழியில் கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர் தொலைவில் (ஒரு மணி நேரப் பயணத்தில்) இயற்கை வேளாண்மைப் பண்ணையான எமிரேட்ஸ் பயோஃபார்ம் இயங்குகிறது. அமீரகத்தில் இயற்கை வேளாண்மையை முன்னெடுக்கும் மிக முக்கியமான பணியை இந்தப் பண்ணை மேற்கொண்டு வருகிறது. விரிந்து பரந்து கிடக்கும் பாலைவனத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி சதுர அடியில் (ஒரு மில்லியன் சதுர மீட்டர்) இயற்கைப் பண்ணைக்கான விளைவிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பண்ணை நிலம் உருவாகி இரண்டு வருடங்களே ஆகியிருப்பதால் இப்போது கால்வாசி நிலப்பரப்பில் - அதாவது கிட்டத்தட்ட 25 லட்சம் சதுர அடியில் - மட்டுமே வேளாண்மை செய்கிறார்கள். இயற்கையான முறையில் வருடத்தில் ஒன்பது மாதங்கள் காரட், பீட்ரூட், வெள்ளரி, கத்தரிக்காய், மிளகாய், தக்காளி, பார்ஸ்லி மற்றும் சில உள்ளூர் கீரை வகைகளையும் தோட்டச் செடிகளையும் இங்கே விளைவிக்கிறார்கள்.
இயற்கை வேளாண்மை என்பதால் செயற்கையான வேதியியல் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் ஏதும் இவர்கள் உபயோகிப்பதில்லை. இயற்கை உயிர்க்கொல்லியாக வேப்பம்கொட்டையை காய வைத்து அரைத்து எடுக்கப்படும் வேம்பு எண்ணெயை உபயோகிக்கிறார்களாம். இதற்காகவே பண்ணையைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான வேப்பமரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து பெறப்படும் இலைகளையும் வேப்பங் கொட்டைகளையும் பயன்படுத்தியே பண்ணைக்குத் தேவையான இயற்கையான பூச்சி மருந்தைத் தயாரிக்கிறார்கள். சுற்றிலும் பாலைவனமாக இருக்க இந்த இடம் மட்டும் வேளாண்மைக்கு உகந்ததாக மாறியது மந்திரத்தால் விளைந்த மாங்காய் இல்லை. அதற்குப் பின்னால் கடும் மனித உழைப்பு இருக்கிறது. பாலை மணலை அகற்றி வரப்புகள் உருவாக்குவது, மண்ணைப் பதப்படுத்துவது, பதப்படுத்தப்பட்ட மண் வேளாண்மைக்கு உகந்ததா எனப் பரிசோதனை செய்வது என்று பல கட்டங்களைக் கடந்த பின்னரே, வெறும் பாலைவனமாக இருந்த இடத்தைக் கோழிகளின் கழிவுகளைக் காய வைத்து வேளாண்மைக்கு உகந்த மண்ணோடு கலந்து வரப்புகளை உருவாக்கி வரப்புகளில் சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக தாவரங்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள்.