நன்றி குங்குமம் முத்தாரம்
ஜப்பானின் கியோட்டோ மாகாணத்துக்கு மேற்குப் பகுதியில் உள்ள புறநகரில் வீற்றிருக்கிறது அராஷியாமா. ‘மலைகளின் அரசி’ என்று அராஷியாமாவை ஜப்பானியர்கள் கொண்டாடுகின்றனர். இதன் அழகை தரிசிக்க இரண்டு கண்கள் போதாது. மனதை வருடும் அராஷியாமா மூங்கில் தோட்டங்கள், நேரத்தை குதூகலமாக செலவிட குரங்கு பூங்கா, அமைதியாக நடைப்பயணம் மேற்கொள்ள ஆற்றுப்பாலம், இரவில் அந்தப் பாலத்தை கடந்து செல்வதைப் போல காட்சி தரும் நிலா, கண்களைக் குளிர்விக்கும் அழகழகான மலர்த்தோட்டங்கள், இலையுதிர் காலத்தில் சிவப்பு நிறமாக மாறியிருக்கும் செர்ரி மர இலைகள், ஜப்பானிய பாரம்பரிய வீடுகள் என்று ரம்மியமாக காட்சியளிக்கிறது அராஷியாமா.
‘டிராவலர்’ பத்திரிகையால் உலகின் அழகான இடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டிருப்பதோடு வருடத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விசிட் அடிக்கும் ஓர் இடமாகவும் மிளிர்கிறது. குறிப்பிட்ட காலம் என்றில்லாமல் எப்போது வேண்டுமானாலும் இங்கே விசிட் அடிக்கலாம் என்பது சிறப்பு.