திருச்சி: திருச்சி பாஜ பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு (40). பாலக்கரை பகுதி பாஜ மண்டல செயலாளராக இருந்தார். கடந்த 27ம் தேதி விஜயரகு, காந்திமார்க்கெட் 6ம் எண் கேட்டில் வாகன வசூலில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏர்போர்ட் பிலிக்கான் கோயில் தெருவை சேர்ந்த பாபு என்ற மிட்டாய் பாபு(20), அவரது நண்பர் சைக்கோ சங்கர் (25) ஆகியோர் அரிவாளை எடுத்து விஜயரகுவை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
தலைமறைவான இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. நாகையில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனாலும் அவர்கள் சிக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த மிட்டாய் பாபு, சைக்கோ சங்கரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து இருவரையும் திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.