சென்னை: சென்னை அடுத்த மாம்பாக்கம் அருகே குடிபோதை தகராறில் வடமாநில வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடன் பணியாற்றும் சக தொழிலாளியை கைது செய்தனர். சென்னை அடுத்த மாம்பாக்கம், காயார் ஆகிய இடங்களில் தனியார் ஸ்டீல் கம்பெனிகள் அதிகம் உள்ளன. இவற்றில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்கின்றனர். இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த இரோம் சுர்மி (36) என்பவர் உள்ளிட்ட 6 பேர் மாம்பாக்கம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் பாஸ்கர் என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தனர். இவர்களுடன் வேலை பார்க்கும் பிரதீப் கட்டாரி (40) என்பவரும், மற்ற 5 பேரும் மாம்பாக்கத்தில் வேறொரு வீட்டில் வாடகைக்கு குடியிருக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் அனைவரும் கொளத்தூர் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது இரோம் சர்மிக்கும், பிரதீப் கட்டாரிக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது பிரதீப் கட்டாரி திடீரென மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் இரோம் சுர்மியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மயங்கி சரிந்த இரோம் சர்மியை உடன் இருந்தவர்கள் மீட்டு திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இரோம் சுர்மி இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து காயார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இராஜேந்திரன், எஸ்.ஐ. கோதண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாம்பாக்கத்தில் உள்ள வீட்டில் மது போதையில் இருந்த பிரதீப் கட்டாரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்