×

150 கிலோ இரும்பு கம்பி திருடிய 2 பேர் சிக்கினர்

அண்ணாநகர்: முகப்பேரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடக்கும் இடத்தில், 150 கிலோ இரும்பு கம்பி திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.   முகப்பேரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு பல லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை பாதுகாத்து வைத்திருந்தனர்.  நேற்று முன்தினம் காலை தொழிலாளர்கள் வந்து பார்த்தபோது 150 கிலோ இரும்பு கம்பிகள் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் மோகன் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் இரும்பு கம்பிகளை சரக்கு வேனில் ஏற்றி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அண்ணாநகரை சேர்ந்த தங்கமணி (27), மகேஷ் (எ) மகேஸ்வரன் (32) ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 150 கிலோ இரும்பு கம்பி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.


Tags : 150 kg iron wire
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...