×

குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு, துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், தரகர்களின் புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. குரூப்-4 தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்து, அதன் காரணமாக, தமிழக இளைஞர்கள் இந்த ஆணையத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு 33 விண்ணப்பதாரர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்த பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, அதிமுக ஆட்சியின் அவலட்சணங்களின் முத்தாய்ப்பாக  விளங்குகிறது.

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 99 தேர்வர்கள் நிரந்தரமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி என்று மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வு முறைகேடு குறித்த விசாரணை மற்றும் கைதுகளைப் பார்க்கும் போது, இது ஏதோ ஒரு மையத்தில் நடைபெற்ற முறைகேடாகத் தெரியவில்லை; மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற “வியாபம்” ஊழலை விட மோசமான மெகா தேர்வு ஊழலுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் பணிபுரியும் ஒரு ரிக்கார்டு கிளார்க்தான் காரணம் என்பது போல், திமிங்கிலங்களை விட்டுவிட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சி செய்து,  விசாரணையைத் திசைதிருப்புவது திட்டமிட்ட- உள்நோக்கம் நிறைந்ததாகவே கருத வேண்டியதிருக்கிறது.

குரூப்-4 தேர்வில் “வெளிப்படைத் தன்மை” விலை பேசப்பட்டு - லட்சக்கணக்கான ரூபாய்க்கு பேரம் பேசி விற்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெறுகின்ற நேரத்தில்-அதுவும் முறைகேடுகள் குறித்து செய்தி வெளிவந்து 25 நாட்களுக்குப் பிறகு பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திடீரென்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இத்தனை நாள் அமைச்சர் எங்கே போயிருந்தார்? யாருக்காக சூப்பர் ஸ்போக்ஸ்மேனாக பணியாற்றி - இந்த முறைகேடுகளைக் கண்டு கொள்ளாமல் அமைதி காத்தார்? இப்போது ஏன் தேர்வாணைய அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார்?

அது மட்டுமின்றி, சி.பி.சி.ஐ.டி விசாரணை முடியும் முன்பே, ஒரு தேர்வு மையத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வைத்து எப்படி அனைத்துத் தேர்வர்களின் முடிவையும் ரத்து செய்ய முடியும் என்று ஏன் கேள்வி கேட்கிறார்?. ஏற்கனவே காவல்துறை உதவி ஆய்வாளர் தனது குடும்பத்தில் உள்ளவர்களை எல்லாம் தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளார் என்றும், அவர் அதிமுக அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் போலீசார் நெருங்க முடியவில்லை என்றும் கூறப்படும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் விசாரணையைத் திசை திருப்பும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 22,250 பேர் குரூப்-4 தேர்வு உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 2018-19 ஆம் ஆண்டில் அதிகபட்ச எண்ணிக்கையாக 17,648 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2019-20 கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு,  துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

தேர்வுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து, பயிற்சி மையங்கள் என்ற பெயரில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்கும், அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முதன்மை முகமையான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திடவும், இந்த விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால், திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : selection scandal ,Group-4 ,Minister of Inquiry ,Jayakumar ,CBI ,probe scandal ,MK Stalin , Group-4 Selection Scandal, CBI Minister of Inquiry, Jayakumar, Dismiss, MK Stalin
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...