ஊழியர்கள் ஸ்டிரைக், வாரவிடுமுறை நாளை முதல் 3 நாள் வங்கிகள் செயல்படாது: ஏடிஎம் சேவையும் முடங்கும் அபாயம்

சென்னை: வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக், வாரவிடுமுறை என்று நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏடிஎம் சேவையும் கடுமையாக பாதிக்கப்படும். 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் பிப்ரவரி 1ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக டெல்லியில் கடந்த 27ம் தேதி மத்திய அரசு நடத்திய கடைசிக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து 2 நாட்கள் ஸ்டிரைக் திட்டமிட்டப்படி தொடங்கும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதன்படி நாளை முதல் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர்.

இந்த போராட்டத்தில் 10 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்கின்றனர். பணம் டெபாசிட், பணம் எடுத்தல், செக் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை வேறு. இதனால் தொடர்ச்சியாக 3 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் இன்றே வங்கிகளில் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களில் வங்கி ஊழியர்கள்தான் பணத்தை நிரப்புவது வழக்கம். வங்கிகள் ஒருநாள் மூடினாலே ஏடிஎம்களில் மதியத்துக்கு மேல் பணம் இல்லாத நிலை தான் உள்ளது. தற்போது வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசு மற்றும் ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் 31ம் தேதி சம்பளம் வழங்கப்படும். இவர்களுக்கு வங்கிகள் மூலம்தான் மாத சம்பளம் பரிவர்த்தனை நடக்கிறது. வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் இவர்களுக்கு 31ம் தேதி சம்பளம் பணம் கிடைக்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: