பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட 335 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்: முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவு

சென்னை: ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட 335 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டத்தை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு கடந்த 11ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 335 இடங்களில் இன்று மறைமுக தேர்தலை நடக்கிறது. இதன்படி ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர், ஓரு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட மொத்தம் 335 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.  

மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு காலை 10.30 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், கிராம ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிகளுக்கு மாலை 3.30 மணிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்லை முழுமையாக வீடியோ பதிவு செய்ய  வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

* இன்று வார்டு மறுவரையறை வரைவு

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை வரைவு பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மீதம் உள்ள 7 மாவட்டங்களுக்கும் பிப்ரவரி முதல்வாரத்தில் வரைவு பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related Stories: