சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்து மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானார். இதனை தொடர்ந்து தோட்ட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பீக்கிரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (43), விவசாயி. வனப்பகுதியை ஒட்டி இக்கிராமம் அமைந்துள்ளதால் யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்தைச் சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில் விவசாயி தங்கவேல் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக அவரது நிலத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.