டெல்லி: 2019ம் ஆண்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் பாதிக்கும் மேலானவை பாலியல் வன்கொடுமை தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளது. 2019ம் ஆண்டில் நாட்டில் பல்வேறு குற்றவழக்குகளில் 102 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 13 பேருக்கும், உத்திரபிரதேசம் மாநிலத்தில் 12 பேருக்கும், மத்திய பிரதேச மாநிலத்தில் 11 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை போலவே கேரளாவில் 5 பேருக்கும், தமிழ்நாட்டில் 4 பேருக்கும், தெலுங்கானாவில் 2 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது புள்ளி விவரங்கள் வாயிலாக தெரிய வந்திருக்கிறது. பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த குற்றங்களுக்கே அதிகளவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதும் அந்த புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த குற்றத்திற்காக 54 பேருக்கும், கொலை செய்த குற்றத்திற்காக 28 பேருக்கும், பயங்கரவாத தொடர்புடைய குற்றங்களுக்காக 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.