டெல்லி: மக்களின் நலனுக்காக செயல்படுவதில் பல சிக்கல்களை எதிர்கொண்ட என்னை பயங்கரவாதி என பாஜக கூறியது மிகவும் வருத்தத்திற்குரியது என ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் வரும் பிப்ரவரி 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் 11ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என விமர்சித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், என்னை பயங்கரவாதி என பாஜக கூறியது வேதனையளிக்கிறது என அரவிந்த் கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்துள்ளார். டெல்லி மக்களுக்காக அனைத்தையும் இழந்துள்ளேன். அரசியலுக்கு வந்த பிறகு மக்களின் நலனுக்காக செயல்படுவதில் எவ்வளவோ இன்னல்களை சந்தித்துள்ளேன். ஆனால், பாரதிய ஜனதா என்னை ஒரு பயங்கரவாதி என்று அழைக்கிறது. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது’ என கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.