டெல்லி: பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்தியாவில் அதிகம் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழும் அரியானா மாநிலத்தை சேர்ந்த சாய்னா நேவால் (29) தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து அவ்வப்போது டுவீட் செய்து வரும் சாய்னா நேவால், தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ள தகவலையும் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்று பா.ஜ., நிர்வாகிகள் முன்னிலையில் சாய்னா நேவால் மற்றும் அவரது மூத்த சகோதரியுமான சந்திரன்ஷுவும் கட்சியில் இணைந்தார்.
அவர்களை கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், கட்சி உறுப்பினர் அட்டையும் வழங்கினர். தொடர்ந்து, பா.ஜக தேசிய தலைவர் ஜெபி நட்டாவை சந்தித்தும் வாழ்த்து பெற்றார். பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற சாய்னா நேவால் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. உலகின் 9-ம் நிலை வீராங்கனையாக திகழ்ந்து வரும் சாய்னா நேவால் பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பாஜகவில் இணைந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் எம்.பி.யாக உள்ளார். தொடர்ந்து, மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், வீரர் யோகேஸ்வர் தத், முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சந்தீப் சிங் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்னா நேவால்:
ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட பல விளையாட்டுத்துறை விருதுகளை பெற்றுள்ளார். 24 க்கும் அதிகமான சர்வதேச பாட்மிண்டன் பட்டங்களை பெற்றவர். லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர்.2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி (2015) மற்றும் வெண்கலம் (2017), இரண்டு முறை காமன்வெல்த்தில் தங்கம் என ஏராளமாக பதக்கங்களை சாய்னா நேவால் குவித்துள்ளவர். தனது பேட்மிண்டன் வாழ்வில் அதிகபட்சமாக 2015-ல் உலகின் முதல் நிலை வீராங்கனையாக உயர்ந்தவர் சாய்னா நேவால். பிரகாஷ் படுகோனேவிற்கு பிறகு உலகின் முதல் நிலை வீரராக சாதனை படைத்தவர் சாய்னா மட்டுமே. இந்தியாவின் 2-வது உயரிய பத்ம பூஷண் விருதினை 2016ல் பெற்றவர் சாய்னா.