மதுரை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை டீன் சங்குமணி தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் தொடர்பாக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் தாக்கத்தால் அங்குள்ள மக்கள் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர். இந்த வைரஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் உலக நாடுகள் சீனாவில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வருவோரை கண்காணித்து அவர்களை பரிசோதனை செய்து அறிகுறி தென்பட்டாலே அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்றன. அதன் ஒரு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய பயணிகளை விமான நிலையத்திலேயே வைத்து அவர்களை சோதனை செய்கின்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.