பிப்.1 தூக்கு உறுதி: ஜனாதிபதியின் அதிகாரத்தில் தலையிட முடியாது...நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து தொடர்ந்த நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நிர்பயா பாலியல் வழக்கு:

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் அனைவருக்கும் வரும் 1ம்  தேதி காலை 6 மணிக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.  

உச்ச நீதிமன்றத்தில் மனு:

இந்த நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருந்தார். ஆனால், அதை பரிசீலனை செய்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம்  நிராகரித்தார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக முகேஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போபண்ணா ஆகியோர்  அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ் வாதத்தில், “இந்த விவகாரம் அரசியல் காரணங்களுக்காக மிகைப்படுத்தப்படுகிறது. இதில் கருணை மனுவை எந்த அடிப்படையில் ஜனாதிபதி நிராகரித்தார் என்பது  புரியவில்லை. மேலும் திகார் சிறையின் உள்ளே முகேஷ் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்’’  என வாதிட்டார். இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தனது  வாதத்தில், திகார் சிறையில் வழக்கின் குற்றவாளியான முகேஷ் தனி அறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார். முகேஷ் குமார் சிங் தரப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு விட்டது. அதற்கான ஆதாரங்கள்  உள்ளன. அதன் அடிப்படையில் தான் ஜனாதிபதி கருணை மனு விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை எடுத்துள்ளார் என வாதிட்டார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முகேஷ் மனு தள்ளுபடி:

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கருணை மனு ஜனாதிபதி நிராகரித்தது அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது. இதில் உச்சநீதிமன்றம்  தலையிட முடியாது. மேலும், சிறைச்சாலையில் தான் துன்புறுத்தப்பட்டதாக முகேஷ் சிங் கூறுவதை ஏற்க முடியாது எனக்கூறி முகேஷ் சிங் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் பிப்ரவரி 1-ம் தேது நிர்பயா  பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.

Related Stories: