பொதுத் தேர்வு எதிரொலி: 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்துங்க...பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்தார்கள். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச்சூழலில் மத்திய அரசு  அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கையும் கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று  அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து, மத்திய அரசின் கல்வித்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்து சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், இந்த நடைமுறையை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் இந்த புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளன. தொடர்ந்து,  நடப்புக் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தமுடிவை கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து  வருகின்றனர். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள்  பற்றி, அடுத்த ஆண்டு முதல் பரிசீலிக்கப்படும் என்று கூறினார். நடப்பாண்டு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.

இந்நிலையில், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பொதுத்தேர்வு எழுதவுள்ள 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை வேளைகளில்  ஒரு மணி நேரம் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 30 மதிப்பெண்களுக்கு முதல் இரண்டு பருவங்களில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தினமும் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு,  கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துடன், சிறிய குழந்தைகளுக்கு மிகப்பெரும் மன அழுத்தம், நெருக்கடி தருவதாக குற்றச்சாட்டியுள்ளனர்.

பொதுத் தேர்வு அட்டவணை:

5-ம் வகுப்பு பொதுத் தேர்வு 2020, ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 15 அன்று தமிழ், 17 அன்று ஆங்கிலம், ஏப்ரல் 20 அன்று கணக்கு எனத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 8-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு  2020, மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. மார்ச் 30 அன்று தமிழ், ஏப்ரல் 2 அன்று ஆங்கிலம், ஏப்ரல் 8 அன்று கணக்கு, ஏப்ரல் 15 அன்று அறிவியல், ஏப்ரல் 17 அன்று சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற  உள்ளன.

Related Stories: