புதுடெல்லி: ‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபாட்டுக்கு அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மொத்தம் 10 நாட்கள் மட்டுமே விசாரணை நடத்தப்படும்,’ என உச்ச திமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று 2018ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து 60க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, முதலாவதாக வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் பின்னர் 9 நீதிபதிகள் அமர்வுக்கும் மாற்றி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், நாகேஸ்வரராவ், எம்.எம்.சந்தானகவுடர், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகிய ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான விசாரணையின் போது என்ன மாதிரியான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிமன்ற தலைமை பதிவாளர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் எனக்கூறி வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.