×

பாகிஸ்தானில் மீண்டும் அத்துமீறல் இந்து பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம்: முஸ்லிம் இளைஞனுடன் திருமணம்

கராச்சி: பாகிஸ்தானில் திருமண மண்டபத்தில் இருந்து இந்து பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து முஸ்லிம் இளைஞனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மதியரி மாவட்டத்தில் ஹலா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் தாஸ். இவரது மகள் பாரதி பாய் (24). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திருமண மேடையில் மணப்பெண் அமர்ந்திருந்த நிலையில், திடீரென போலீஸ் உடையில் வந்த சிலர் ஆயுதங்களை காட்டி பாரதி பாயை கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர் அவரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றி, ஷாருக் குல் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதமே பாரதி பாய் மதம் மாறிவிட்டதாகவும் அவரது பெயர் புஷ்ரா என்றும், மதமாற்றம் சான்றிதழை ஷாருக் குல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், சிந்து மாகாண சிறுபான்மையின அமைச்சர் ஹரி ராம் கிஷோரி, சம்பவம் தொடர்பாக போலீஸ் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிக்கு மத்திய அரசு நேற்று சம்மன் அனுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிரான சம்பவங்களில் அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், சிந்து மாகாணத்தில் இந்து கோயில் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்திலும் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக பாகிஸ்தானில் இந்து பெண்கள், சிறுமிகள் கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்துக்கள் அதிகம் வசிக்கும் சிந்து மாகாணத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் 15 வயது சிறுமி கடத்தி கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி அவர் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.


Tags : conversion ,Pakistan , Pakistani, Hindu woman, Muslim young man, married
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி