சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை: கலெக்டர் தகவல்

கோவை: சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 8 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து கோவையை சேர்ந்த 4 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், திண்டுக்கல் மற்றும் சென்னையைச் சேர்ந்த தலா ஒருவர் என 8 பேர் நேற்று கோவை விமான நிலையம் வந்தனர். அப்போது அவர்கள் 8 பேருக்கும் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையென உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக கலெக்டர் ராஜாமணி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 8 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 பேரும் 28 நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 8 பேரையும் தனி இடத்தில் வைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.  இவ்வாறு கலெக்டர் ராஜாமணி கூறினார்.

Related Stories: