சென்னை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாநில அளவிலான பணி ஆய்வுக்கூட்டம் நேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடந்தது. இதில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து பேரிடர் காலங்களில் மரங்களை அகற்ற ₹39.50 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள டெலிஹாலண்டர் இயந்திரம், 5.20 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள கழிவுநீர் அகற்றும் நவீன சுப்பர் சக்கர் இயந்திரம், தெருவோரங்களில் வசிப்பவர்கள் மீட்பதற்காக 50 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள மீட்பு வாகனம் ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார்.