மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நேற்று மாலை 6மணி முதல் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 170 வது நாளாக 100 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் இருந்து வருகிறது. மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாகப்பட்டினம் உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை 230 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். முப்போக சாகுபடிக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். பாசனப்பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து பாசனத்தேவை குறையும். கடந்த நீர் பாசன ஆண்டில் ஜூன் 12ல் மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாததால் இரண்டு மாதம் தாமதமாக ஆகஸ்ட் 13ம்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை வரை மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 151 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.