குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் சிக்கியது ராமேஸ்வரம் தேர்வு மையம்

* பல கோடி ரூபாய் அதிகாரிகள், இடைத்தரகர்களுக்கு கைமாறியது

* முறைகேடாக ‘பாஸ்’ செய்து பணியில் சேர்ந்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய முடிவு

சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் அடுத்த திருப்பமாக கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 37 முதல் 100 ரேங்க் பெற்றவர்கள் மீது சிபிசிஐடி கழுகு பார்வை திரும்பி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் மோசடி நடந்தது தெரியவந்தது. இதில் முறைகேடாக தேர்வு எழுதிய 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி ஊழியர் முதல் உயரதிகாரிகள், புரோக்கர்கள் வரை ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட அரசு ஊழியர்கள் ரமேஷ் (39), திருக்குமரன் (35), தேர்வு எழுதிய நிதீஷ்குமார் (21), ஓம் காந்தன் (45) உள்பட 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முகப்பேரை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமாரை சிபிசிஐடி போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவன் கொடுத்த தகவலின்படி குரூப் 4 முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற நபர்களை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், இடைத்தரகர்களுக்கு 7.50 லட்சம் பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தை ேசர்ந்த விக்கி(எ)த.விக்னேஷ்(25), கடலூர் மாவட்டம் பண்ரூட்டி தாலுகா தனலட்சுமி நகரை சேர்ந்த சிவராஜ்(31) ஆகியோரை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், மோசடி குறித்து மாவட்ட வாரியாக இடைத்தரகர்கள் மற்றும் தேர்வு எழுதி வெற்றி பெற்ற நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரணை நடந்து வரும் நிலையில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள 14 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

குருப் 4 தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்து மோசடியில் சிக்கியுள்ள ராமேஸ்வரம் தேர்வு மையம், குரூப் 2 தேர்வு எழுதிய நபர்கள் முதல் 100 இடங்களில் 37 இடங்களை பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் கடந்த ஓராண்டாக நகராட்சி ஆணையர், வேலைவாய்ப்பு இளநிலை அதிகாரி, சமுக பாதுகாப்பு பயிற்சி அதிகாரி, இந்து அறநிலையத்துறை தணிக்கை அதிகாரி, சிறைத்துறை பயிற்சி அதிகாரி உள்ளிட்ட பல பதவிகளில் தற்போது அதிகாரியாக ஓராண்டாக நல்ல ஊதியத்தில் பணியில் உள்ளனர். குரூப் 4 முறைகேடு போன்று கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வு எழுதிய நபர்களிடம் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை வசூலித்து மோசடியாக முதல் 37 இடங்கள் ராமேஸ்வரம் தேர்வு மையம் பிடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் ஓம் காந்தன் உதவியுடன் ஜெயக்குமார் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு குரூப் 2 தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி வெற்றி பெற்று தற்போது உயர் பதவியில் உள்ள 37 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதில் உண்மைகள் வெளிவரும் பட்சத்தில் தற்போது அதிகாரிகளாக பதவியில் இருக்கும் அனைவரும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் பணியில் இருந்தபோது ேபாட்ட அனைத்து உத்தரவுகளும் தானாகவே செல்லாததாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருவதால் மோசடி பின்னணியில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Related Stories: