×

அறநிலையத்துறை கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு பிப்.3 முதல் புத்தொளி பயிற்சி

* 6 வாரம் நடத்த கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு 6 வாரம் புத்தொளி பயிற்சி அளிக்க கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் ஆகியோருக்கு மாவட்டங்கள்தோறும் 6 வாரங்கள் புத்தொளிப்பயிற்சி அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் வரும் பிப்ரவரி 3ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரையிலான காலத்திற்குள் புத்தொளி பயிற்சி முடித்து அறிக்கை சமர்ப்பிக்க அனைத்து மண்டல இணை ஆணையர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதன்படி, இந்த புத்தொளி பயிற்சி வரும் 3ம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை 6 வார காலங்களில் 2 மணி நேரம் (உச்சி காலம் முடிந்து நடை திறக்கும் இடைவேளையில்) நடத்த வேண்டும். இந்த புத்தொளி பயிற்சி அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 ஊக்கத்தொகை தர வேண்டும். 2003ம் ஆண்டு பாடத்திட்டப்படி அவர்களுக்கு ஆசிரியர்கள் வகுப்பு நடத்த வேண்டும். இதில், சைவத்திருமுறை ஆகமப்பயிற்சியில் வேதம் மற்றும் ஆகமத்துக்கு 8,500, ஆகமம் மட்டும் 6700, திருமுறை 3700, சில்ப சாஸ்திரம் ரூ2250, சைவ சித்தாந்தம் 2,250ம் வைணவ திவ்ய பிரபந்த பயிற்சியில், பஞ்சாரத்தின் ஆகமம் 6700, வைகானச ஆகமம் 6,700, சில்ப சாஸ்திரம் 3,700ம் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : temples ,Bhattacharyas , First batch ,Buddhist training , Archaic , Bhattacharyas in temples
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு