நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள், நகரங்களை தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், 27 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக தேர்தல் நடந்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக 2 முறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன்படி 9 மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அதுதொடர்பான அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், 27 மாவட்டங்களை சேர்ந்த  தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 27 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் நாளை நடைபெற உள்ள 335 இடங்களுக்கான மறைமுக தேர்தல் தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இதை தவிர்த்து 27 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் நடந்து வருவதால் அதை தவிர்த்து மீதம் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: