சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள், நகரங்களை தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், 27 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக தேர்தல் நடந்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக 2 முறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன்படி 9 மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் அதுதொடர்பான அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி நேற்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன், 27 மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.