கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து தொடர்ந்த நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷின் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: நிர்பயா வழக்கில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிராக குற்றவாளி முகேஷ் குமார் சிங் தொடரந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் அனைவருக்கும் வரும் 1ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.  

இந்த நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருந்தார். ஆனால், அதை பரிசீலனை செய்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக முகேஷ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் மற்றும் போபண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ் வாதத்தில், “இந்த விவகாரம் அரசியல் காரணங்களுக்காக மிகைப்படுத்தப்படுகிறது. இதில் கருணை மனுவை எந்த அடிப்படையில் ஜனாதிபதி நிராகரித்தார் என்பது புரியவில்லை. மேலும் திகார் சிறையின் உள்ளே முகேஷ் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்’’ என வாதிட்டார்.

இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தனது வாதத்தில் கூறியதாவது:

திகார் சிறையில் வழக்கின் குற்றவாளியான முகேஷ் தனி அறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை எதிர்தரப்பினர் கூறுவது போன்று கொடுமை ஏதேனும் நடந்து இருப்பின் விசாரணை நீதிமன்றத்தில்தான் முறையிட வேண்டுமே தவிர, கருணை மனு தொடர்பான விவகாரத்தில் அதனை காரணமாக கூற முடியாது. இதில் முகேஷ் குமார் சிங் தரப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு விட்டது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் தான் ஜனாதிபதி கருணை மனு விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை எடுத்துள்ளார். அதனால் அவரது உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது கிடையாது. இதைத்தவிர குற்றவாளிகள் செய்த குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்பதால் அவருக்கு கண்டிப்பாக கருணைக் காட்டக்கூடாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: