கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஓவியம் வரையும் நூதன போராட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘சிஏஏ தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச தயார். ஆனால் முதலில் அந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்’’ என்றார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரமாக போராடி வருகிறார். அதோடு இந்த சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்க சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த முடியாது என மம்தா தொடர்ந்து கூறி வருகிறார்.