திருவான்மியூர் கலாஷேத்ரா காலனியில் 100 சவரன் கொள்ளையில் வேலைக்காரி சிக்கினார்: 30 சவரன் பறிமுதல்

துரைப்பாக்கம்: திருவான்மியூரில் டாக்டர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளைபோன சம்பவத்தில், வேலைக்காரி கைவரிசை காட்டியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 சவரன் நகையை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகை குறித்து விசாரிக்கின்றனர். சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா காலனியை சேர்ந்தவர் ராஜா சுருளீஸ்வரன் (55). டாக்டர். இவருக்கு, சொந்தமான மற்றொரு வீடு கீழ்ப்பாக்கத்தில் உள்ளது. இதனால் கீழ்ப்பாக்கத்தில் கிளினீக் நடத்தி வருகிறார். ராஜா சுருளீஸ்வரன் 2 வீடுகளுக்கு மாறி சென்று வருவது வழக்கம்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சுருளீஸ்வரன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பியபோது கதவை திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 100 சவரன் நகை காணாமல் போயிருந்தது. இதுகுறித்து உடனே திருவான்மியூர் போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது வீட்டில் வேலை செய்யும் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மாலா (47) என்பவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாலா சிறுக சிறுக நகையை திருடியது தெரிய வந்தது. அவரிடம்இருந்து 30 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: