நில அதிர்வு அளவீட்டை கண்டறிந்த அமெரிக்கர்

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

பொது அறிவு

நிலநடுக்கம் (பூகம்பம், பூமியதிர்ச்சி) என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் ஏற்படும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வை நிலநடுக்கமானியினால் (seismometer) அளவிட பயன்படுத்தப்படும் (Richter Magnitude Scale) அளவை முறையே ரிக்டர் அளவு.இந்த ரிக்டர் அளவு முறையை அமெரிக்க நில அதிர்வு ஆய்வியலாளர் சார்லஸ் ரிக்டர்1935ம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அவரின் பெயரைக் கொண்டே இந்த அளவு முறை ரிக்டர் அளவு என்று அழைக்கப்பட்டது.

இம்முறை தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஓர் அலகு அதற்கு முந்தைய அலகு அளவைவிடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையறுக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10 × 10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

ரிக்டர் அளவில் 2.0-க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவை மைக்ரோ எனப்படும். இவை சாதாரணமாகத் தொடர்ந்து நடைபெறும். 6.0-க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நில அதிர்வு நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் நில அதிர்வு அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால், அதே அளவு நில அதிர்வு ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடச்செய்வதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்கமுடியும்

Related Stories: