×

வழக்கு பட்டியலிடும்போது தான் விசாரிக்கப்படும்: சென்னை - சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னைக்கும், சேலத்திற்கும் இடையே உள்ள சாலை போக்குவரத்தை மேம்படுத்த அதிவிரைவு சாலைகள் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டன. மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த 8 வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இதற்காக ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், சமூக ஆர்வர்லர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 8 வழிச்சாலை பசுமைதிட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமனா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ண முராரி ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக பட்டியலியிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை நாளைக்காவது விசாரிக்குமாறு சாலை திட்ட மேலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை நிராகரித்த நீதிபதிகள் வழக்கு எப்போது பட்டியலிடபடுகிறதோ அப்போது தான் விசாரிக்கபடும் என கூறியுள்ளனர்.

Tags : Salem 8 High Court ,Chennai , Case, Chennai, Salem, 8th Circuit, Supreme Court
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...