கோவை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழகம், மே 17 இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்ணனி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றன. ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக பள்ளி கல்வித்துறையை சீரழிக்கும் தமிழக அரசை கண்டித்தும், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் குழந்தை தொழிலாளர் போல வேடமணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.