5,8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு மாணவ-மாணவிகளுடன் ஆர்ப்பாட்டம்

கோவை:  ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழகம், மே 17 இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்ணனி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றன. ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக பள்ளி கல்வித்துறையை சீரழிக்கும் தமிழக அரசை கண்டித்தும், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட  பள்ளி மாணவ மாணவிகள்  குழந்தை தொழிலாளர் போல வேடமணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதுகுறித்து தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், ‘‘மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை இன்னும் அமலாகாத நிலையில், அதில்  இருக்கும் பாதகமான சாரம்சங்களை அமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி  வருகிறது. அதில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முறை அறிவிப்பு.இந்த முறையால் குழந்தைகள் மன அழுத்ததிற்கு உள்ளாவார்கள், இடைநிற்றல் அதிகரித்து குழந்தை தொழிலாளர்கள் உருவாகும் சூழல் ஏற்படும். உடல் உழைப்பு தொழிலாளர்களை உருவாக்க தான் இந்த பொதுத்தேர்வு முறையை தமிழக அரசு அவசர அவசரமாக நிறைவேற்றுகிறது.இதன் மூலம் குழந்தைகள் அறிவுப்பூர்வமான கல்வியை பெறமுடியாமல் போகும் நிலை ஏற்படும்.  பொதுதேர்வை ரத்து செய்யாவிட்டால் இதன் பின்விளைவுகளையும், மக்களின் கொந்தளிப்பையும் தமிழக அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,’’ என்றார்.  

Related Stories: