புதுடெல்லி: துரோகிகளை சுட்டுத்தள்ளுவோம் என பிரசாரத்தில் கோஷம் எழுப்பும்படி கட்சி ஆதரவாளர்களிடம் பாஜ தலைவரும் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் கூறியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ரித்தாலா தொகுதி வேட்பாளர் மணீஷ் சவுத்ரியை ஆதரித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேசியவாதம் குறித்து அவர் உணர்ச்சிவசமாக பேசியதோடு, ஷாகீன்பாக்கில் குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருபவர்களை சரமாரியாக தாக்கி பேசினார். மேலும் போராட்ட களத்தில் தேச விரோத கோஷங்கள் முழங்கப்படுவதாகவும் கூறிய அவர், தனது பிரசாரத்தை காண குவிந்த ஆதரவாளர்களை நோக்கி, ‘‘தேச துரோகிகளை சுட்டுத்தள்ளுவோம்’’ என்றார், உடனே அங்கிருந்தவர்கள், ‘‘துப்பாக்கி தோட்டாவால் சுட்டுத்தள்ளுவோம்’’ என கோரசாக கோஷமிட்டனர்.