புதுடெல்லி: `‘கடந்த ஐந்து ஆண்டுகளில், 7 முக்கிய துறைகளில் 3.64 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போனது. இதுவே, மக்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகளின் உண்மை நிலை’’ என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் அவ்வபோது கருத்துகள் பதிவிடுவதை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் தனது டிவிட்டர் பதிவில், ``கடந்த 5 ஆண்டுகளில், நாட்டிலுள்ள முக்கியமான 7 துறைகளில், ஏறக்குறைய 3.64 கோடி பேருக்கு வேலை வாய்ப்பில்லை. வேலை வாய்ப்பு அளிப்பதாக அரசு அளித்த வாக்குறுதிகளின் உண்மை நிலை இதுதான். இதனால் தான், வேலை வாய்ப்பு பற்றி பேசவே அரசு வெட்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.