கணவருடன் சேர்த்து வைக்க கோரி மகளிர் காவல் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

திருவொற்றியூர்: பிரிந்த கணவனை மீண்டும் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (25). இவரும், புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பரமேஸ்வரி (21) என்பவரும் காதலித்து வந்தனர். இதுபற்றி அறிந்த இரு வீட்டாரும், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், கடந்த 2017ம் ஆண்டு பரமேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி, காதலன் கிருஷ்ண பிரசாத்துடன் தனியாக குடும்பம்  நடத்தி வந்தார்.  

இந்நிலையில், கடந்த மாதம் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பரமேஸ்வரி கடந்த மாதம் கணவனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் சமாதானம் அடைந்த பரமேஸ்வரி மீண்டும் சில தினங்களுக்கு முன்பு கணவன் வீட்டிற்கு வந்தார். அப்போது, கணவன் கிருஷ்ணபிரசாத், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இது சம்பந்தமாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரமேஸ்வரி புகார் செய்து, தன்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு கூறினார். இதையடுத்து, கிருஷ்ண பிரசாத்தை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணபிரசாத் மற்றும் பரமேஸ்வரி ஆகிய இருவரையும் மீண்டும் காவல் நிலையம் அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பரமேஸ்வரி காவல் நிலையத்திற்கு வெளியே வந்து தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த போலீசார் ஓடிவந்து அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர், கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் கூறியதைத் தொடர்ந்து பரமேஸ்வரி சமாதானம் அடைந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: