புதுடெல்லி: ஏர் இந்தியாவின் நூறு சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று நிதி திரட்டுவதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது. பாரத் பெட்ரோலியம் உட்பட முக்கிய நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்று வருகிறது. ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் இந்த நிறுவனத்தை விற்றுவிடும் முடிவுக்கு மத்திய அரசு வந்தது. ஏர் இந்தியாவில் மத்திய அரசுக்கு தன்வசம் உள்ள பங்குகளில் 76 சதவீதத்தை தனியாருக்கு விற்க கடந்த 2018ல் அறிவிப்பு வெளியிட்டது. அதோடு நிர்வாக குழுவில் அரசும் இடம்பெறும் என கூறப்பட்டது. அதோடு, கடன் சுமையை ஏற்பதை பற்றி உறுதி அளிக்கவில்லை. இதனால் ஏர் இந்தியாவை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே, இந்த முறை நூறு சதவீத பங்குகளையும் விற்று விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், ஏர் இந்தியா நிறுவனத்தின் நூறு சதவீத பங்குகள் மற்றும் அதனுடன் சேர்த்து ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 50 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும் எனவும், ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வரும் மார்ச் மாதம் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.