மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது. இதனால், முதலீட்டாளர்களுக்கு 1 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர். கடந்த வார இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. ஆனால், வாரத்தின் முதல் நாளான நேற்று, பங்குச்சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியபோது பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் துவக்கத்தில் 41,510.68 புள்ளிகளாக இருந்தது. அதிக பட்சமாக 41,516.27 புள்ளிகள் வரை சென்றது. ஏற்றம் சில நிமிடங்கள் கூட இது நீடிக்கவில்லை. தொடர்ந்து சரியத்துவங்கியது. வர்த்தக இறுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையை விட 458.07 புள்ளிகள் சரிந்தது. வர்த்தக இடையில் 500 புள்ளிகள் வரை வீழ்ச்சி ஏற்பட்டது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 129.25 புள்ளிகள் சரிந்து 12,119 புள்ளிகளாக இருந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிர்ப்பலி அதிகரித்துக்கொண்டே வருகிறது. அங்கு சுமார் 80 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 2,700க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.