மகளுக்கு காதல் டார்ச்சரை தட்டிக்கேட்டதால் பயங்கரம் திருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை

திருச்சி: மகளுக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததை தட்டிக்கேட்ட பா.ஜ. பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்டதியுள்ளது. திருச்சி வரகனேரி பென்சனர் தெருவை சேர்ந்தவர் விஜயரகு (40). பாலக்கரை பகுதி பாஜ மண்டல செயலாளர். காந்தி மார்க்கெட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று காலை விஜயரகு, காந்தி மார்க்கெட் 6ம் எண் கேட்டில் வாகன வசூலில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏர்போர்ட் பிலிக்கான் கோயில் தெருவை சேர்ந்த பாபு (எ) மிட்டாய் பாபு (20) என்பவர், நண்பர் சைக்கோ சங்கருடன் அங்கு வந்தார். திடீரென இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயரகுவை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனே இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் விஜயரகுவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் விசாரித்தனர்.

இதில், விஜயரகுவின் மகளை மிட்டாய் பாபு காதலித்துள்ளார். மகளை பெற்றோர் கண்டித்தனர். அதன்பின் அவர் பாபுவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதையடுத்து மிட்டாய் பாபு, விஜயரகு மகளை ஆங்காங்கே வழிமறித்து தனது காதலை ஏற்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதை அவர் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த விஜயரகு, மிட்டாய் பாபுவிடம் ‘‘என் மகள் படிக்க வேண்டும். நான் வேறு மதத்தை சேர்ந்தவருக்கு பெண் கொடுக்க தயார் இல்லை. இனி இடையூறு செய்யாதே’’ என எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக கடந்தாண்டு ஏற்பட்ட தகராறில் மிட்டாய் பாபு, விஜயரகு,  இவரது மைத்துனர் கிருஷ்ணகுமார் ஆகியோரை வெட்டி விட்டார். இந்த வழக்கில் மிட்டாய்பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு வழக்கிலும் கடந்த 9ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த மிட்டாய் பாபு மீண்டும் விஜயரகுவிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர் கடுமையாக எச்சரித்து அனுப்பி உள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் தேடி வருகின்றனர்.  கொலையாளிகளை கைது செய்ய கோரி அரசு மருத்துவமனை முன்பு குவிந்த பாஜவினர் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்: சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ேநற்று அளித்த பேட்டியில், ஏற்கனவே எஸ்எஸ்ஐ வில்சன் கொல்லப்பட்டார். இப்போது எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த நிலை தொடர்வது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. தமிழகத்தில் ஒரு யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். எதற்கும் ஒரு எல்லை உண்டு. எல்லை மீறினால் எல்லோருக்கும் ஓர் உயிர் தான். எல்லோருக்கும் ஒரு சாவுதான். அதைப்பற்றி கவலைப்பட நாங்கள் தயாராக இல்லை. இதை தமிழக அரசும் காவல் துறையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

* மதம் காரணம் இல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொ), மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் அளித்த பேட்டி:

பாஜ பிரமுகர் விஜய்ரகு கொலை மதத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை. குற்றவாளி பல வழக்குகளில் குண்டாசில் கைது செய்யப்பட்டிருந்தவர், அவர் ஜாமீனில் வெளியே வந்த பின் போலீசார் முறையாக பின் தொடரவில்லை என்று தெரிய வந்தால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவி காட்சிகளில் வந்து சென்றவர்கள் விபரம் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.

Related Stories: