கடலூர்: கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. அப்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்( 75) என்பவர் மனு கொடுக்க வந்தார். அவர் மறைத்து எடுத்து வந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மடக்கிப்பிடித்து தீப்பெட்டியை தட்டி விட்டனர். பின்னர் விசாரணை மேற்கொண்டபோது முதியவர் கோவிந்தராஜ் கண்ணீர் மல்க கூறியதாவது:
எனக்கு 4 மகன்கள். கடைசி மகன் நித்தியானந்தன் மட்டும் என்னை கவனித்து வந்தார். மற்ற மூன்று மகன்களும் என்னை கண்டுகொள்வதில்லை. நித்தியானந்தன் வெளிநாட்டுக்குச் சென்று அனுப்பிய பணத்தை வைத்து வீடு கட்டினேன். நித்யானந்தன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இதனை அறிந்த மற்ற மகன்கள் சுகுமார், ரங்கநாதன் உள்ளிட்டவர்கள் என்னையும் நித்யானந்தன் குடும்பத்தினரையும் தாக்கியதோடு வீட்டைவிட்டு துரத்தினர். போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு கூறினார். பின்னர் புகார் மனுவை கலெக்டரிடம் வழங்கினார்.