×

சென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: சென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கடந்த 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள நீர்நிலைகளை கண்டறிந்து அவற்றை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்அடிப்படையில் சென்னை முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி மொத்தம் 210 நீர்நிலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் முதற்கட்டமாக சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் 5 குளங்கள் ரூ5.95 கோடி செலவில் சீரமைக்கப்பட்டன.

பின்னர், ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அந்த நிதியின் கீழ் குளங்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 63 குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 40 மேற்பட்ட குளங்களில் 75 சதவீத பணிகளும், 20 குளங்களில் 50 சதவீத பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதை தவிர்த்து பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்கள் நீர்நிலைகளை சீரமைக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி  பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் 64  நீர்நிலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து 27 நீர்நிலைகளை பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் சீரமைக்க பேச்சு நடந்து வருகிறது. இதனிடையே சென்னை பெருநகர் வளர்ச்சி நிதியின் மூலம் 47 நீர்நிலைகளை சீரமைக்க தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து இருந்தது. இந்நிலையில் சென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளது.


Tags : government ,Tamil Nadu ,Chennai ,water bodies ,restoration , Madras, 3 watershed, restoration work, finance, Govt
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...