மயிலாப்பூரில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச முயற்சி செய்த 4 பேர் கைது

சென்னை:  ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த விவகாரத்தில் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை மயிலாப்பூர் வரதராஜ புரத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலில் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆயுதப்படை காவலர் மணிகண்டன் பணியில் இருந்தபோது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டுகளை எடுத்து அவர் மீது வீச முயற்சித்ததாக கூறப்படுகிறது. உடனே காவலுக்கு இருந்த மணிகண்டன் அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அவர்கள் அதிஷ்டவசமாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவலர் மணிகண்டன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்திய காவல் துறையினர், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அச்சமயம் அந்த மர்ம நபர்கள், தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த தமிழ்வாணன், ஜனார்த்தனன், சசி, பாபு ஆகிய 4 பேரும் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கண்காணிப்பு கேமராவின் அடிப்படையில் அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: