×

40 நாட்கள் போரில் ஈடுபடுவதற்காக ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பு வைக்கும் பணியில் இந்திய ராணுவம் மும்முரம்

டெல்லி: 40 நாட்கள்  போரில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை இருப்பு வைக்கும் பணியில் இந்திய ராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சுமார் 13 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய ராணுவம், ராக்கெட்கள், ஏவுகணைகள், அதிநவீன பீரங்கிகள் என படிப்படியாக ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. மிகவும் பொறுமையாக அதே சமயம் நிதானமாக இந்த ஆயுத திரட்டலில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம், ஏவுகணைகள், உயர்த்திறன்மிக்க டாங்கிகள், பீரங்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை இருப்பு வைத்து வருகிறது. இவை அனைத்தும் தற்போது வரை 10 நாட்களுக்கு முழுவீச்சில் போர் புரிவதற்கு போதுமானதாகும். அதேவேளையில் இந்த கையிருப்பை, 40 நாட்களுக்கு போதுமான அளவு உயர்த்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தற்போது போர் செய்யும் திட்டம் எதுவும் இந்திய ராணுவத்திற்கு இல்லை என்றாலும், பாகிஸ்தான் மற்றும் சீனாவை மனதில் வைத்து, இந்தியா ஆயுத திரட்டலில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக உடனடியாக போர் ஏற்பட்டால் தயார் நிலையில் இல்லை என்று அர்த்தமாகிவிடாது எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல சிக்கலான மற்றும் கடுமையான ஆயுத வகைகளில் முன்பெல்லாம் மிகப் பெரிய பற்றாக்குறை இருந்து வந்தது. இந்த குறைபாடுகளை சரிசெய்யும் பொருட்டு 19 வெளிநாட்டு நிறுவனங்களுடன் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 24 ஒப்பந்தங்கள் மூலம் சரிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2012ம் ஆண்டு முதலே விமானப்படை, வீரர்கள், பீரங்கிகள் என அனைத்து வகையிலும் பாதுகாப்பு துறை பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

Tags : Indian Army ,war , 40 Days of War, Weapons, Ammunition, Reserve, Indian Army
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...