2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்

புதுடெல்லி: 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த இந்திய மற்றும் பிரேசில் நாடுகளின் வர்த்தக மன்றத்தில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை, ரயில்வே துறை ஆகியவற்றுக்கான அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ரயில்வே துறையை மின்மயம் ஆக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில் வருகிற 2024ம் ஆண்டிற்குள் ரயில்வே துறை 100 சதவீதம் அளவிற்கு மின்மயம் ஆக்கப்படும்.இதனால் உலகிலேயே 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கக்கூடிய மிகப்பெரிய முதல் ரயில்வே துறையாக இந்திய ரயில்வே இருக்கும்.

இதேபோன்று வரும் 2030ம் ஆண்டிற்குள், ரயில்வே துறை முழுவதும், பருவநிலையில் பாதிப்பு அல்லது சுற்றுச்சூழலை மாசடைய செய்யும் கழிவு பொருட்களை வெளியேற்றாத வகையில் உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். அதாவது, 2030க்குள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் ரயில்வேயை மாற்ற திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பிரேசிலுடனான கூட்டாண்மை நோக்கம் குறித்தும் மத்திய அமைச்சர் பேசினார். அப்போது, பிரேசில் நாட்டுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Related Stories: