விருதுநகர்: குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை தூக்கிலிட வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என கூறிய அன்புமணி, சிவகாசியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவரை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும், பாலியல் வன்கொடுமை குறித்து குழந்தைகள், மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். குழந்தைகள் பெண்கள் மத்தியில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் பாலியல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.