ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நாளை நடைபெற உள்ள திமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு!

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நாளை நடைபெற உள்ள திமுக போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி, அந்த பகுதி மக்களின் கருத்துக்கள் கேட்க தேவையில்லை என்று மத்தியஅரசு சமீபத்தில் விதிகளை திருத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தமிழக மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் வரும் 28ம்(நாளை) தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் மத்திய பாரதிய ஜனதா அரசு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த தேவையில்லை என அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி இருந்தார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் அனுமதி மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எல்லாம் நடத்த தேவையில்லை என மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், கபட நாடகத்தை காட்டுகிறது.

எனவே விவசாயிகளின் நலனுக்கு எதிராக இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 28ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தஞ்சையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை திமுக சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில், அனுமதியை மீறி போராட்டம் நடைபெறும், என தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரைசந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

Related Stories: