புதுடெல்லி: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நிர்பயா குற்றவாளி முகேஷ் குமார் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் 4 பேரும் மாறி மாறி சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்து வந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் அனைத்து நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்டது. ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டதால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என்ற நிலை உருவாகி உள்ளது.