டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பிப்.1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் நாட்டின் 130 கோடி மக்களின் விருப்பத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘நாட்டு மக்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மத்திய பட்ஜெட் நிறைவேற்றும். வளர்ச்சிக்கான திட்டங்கள் இதில் இடம் பெறும். பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை ‘மைகவ்’ என்ற அரசின் இணையதளத்தில் வழங்கலாம்’’ என்று கூறியிருந்தார்.